197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி; விடுதலையாவாரா ரஞ்சன் ராமநாயக்க?
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 197 கைதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கவுள்ளார் என்று சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகாம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என்று தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.