பதவிப்பிரமாணம் செய்து அரியணை ஏறிய ரணில் விக்கிரமசிங்க!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுப் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.
இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஒன்பதாவது நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
1970ஆம் ஆண்டு களனித் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1977ஆம் ஆண்டில் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அப்போது கடமையாற்றியிருந்தார்.
28 வயதில் வெளிவிவகாரப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார்.
1989ஆம் ஆண்டு மார்ச் 06 முதல் 1993ஆம் ஆண்டு மேமாதம் 07 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற சபை முதல்வராகப் பணியாற்றியிருந்த ரணில் விக்கிரசிங்க, 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்தார்.
அவர் முதன்முறையாக 1993ஆம் ஆண்டு மே மதம் 07ஆம் திகதி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை அந்தப் பதவியை வகித்திருந்தார்.
அவர் ஆறு தடவைகள் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பதவியை வகித்து வரும்போதே மக்களின் எதிர்ப்பை அடுத்து கோட்டாபய ராஜபக்ச இம்மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசமைப்புக்கு அமைய பதில் ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.