இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்
இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இசைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த பிரியங்கர பெரேரா, பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தார்.
மறைந்த பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தந்தையின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து இலங்கை இசைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அவரது குரலில் வெளியான ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
பாடகராக மட்டுமன்றி, பிரியங்கர பெரேரா ஒரு திறமையான நடிகராகவும் கலைத்துறையில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார்.
இசை மற்றும் நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிய அவர், பல ஆண்டுகளாக கலைத்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
அவரது மறைவு இலங்கை கலைத்துறையினருக்கும், அவரது இசையை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
அன்னாரின் மறைவுக்கு கலைத்துறையினர், சக பாடகர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.