புத்தாண்டு சலுகைகளின் பெயரில் மோசடி ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழியில் நிதி மோசடிகள், தரவுத் திருட்டு போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மக்களின் பணம் மற்றும் உணர்திறன் மிக்க தகவல்களை மோசடியாகப் பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார கஷ்டங்கள் மற்றும் உடனடி நிதி லாபங்களை எதிர்பார்க்கும் நபர்கள், இவ்வாறான மோசடி முறைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாக கடந்த காலங்களில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசடியான விளம்பரங்கள், போலி இணைய இணைப்புகள் (Links), புத்தாண்டு சலுகைகள் (Offers) மற்றும் அன்பளிப்புகள் (Giveaways), போலி வர்த்தக இணையதளங்கள், போலி வங்கிச் சலுகைகள், போலி வங்கி இணையதளங்கள்/செயலி புதுப்பித்தல்கள், போலி QR குறியீடு ஸ்கேன் (Scan) மோசடிகள், மின்னஞ்சல் ஊடான மோசடிகள் (Email Phishing), குறுஞ்செய்தி மோசடிகள் (SMS Phishing), உண்மையானவை போன்ற தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மற்றும் அழைப்பாளர் அடையாளத்தை மாற்றும் முறைகள் (Caller ID Spoofing) போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அத்துடன், இத்தகைய மோசடிகளை விளம்பரப்படுத்தும் போது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான மோசடி முறைகள் ஊடாகப் பெறப்படும் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் (Phishing Attacks), நிதி மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டு போன்ற அபாயங்களுக்கு மக்கள் முகம் கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கு இணையவழியில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது போதிய விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.