இலங்கையிலுள்ள ஆபத்தான நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
2016 ஆம் ஆண்டு, இலங்கைக்குள் 111 கிலோகிராம் ஹெரோயினை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து இலங்கைக் கடல் பகுதியில் நடத்திய சோதனையின் போது, இந்தச் சம்பவம் தொடர்பாக 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை
இதனையடுத்து, சந்தேக நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கம்பஹாவின் படல்கம பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த பாகிஸ்தானியருக்குக் கடந்த ஜூலை மாதம் 04 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.
இந்த பிணை நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பாகிஸ்தானியர் உத்தரவைப் பின்பற்றாது, பிணை நிபந்தனைகளை மீறியதால், நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது உத்தரவைப் பிறப்பித்தது.
இந்தநிலையில், சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 071-8591881 அல்லது 011-2343333 இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.