தேசபந்து தென்னகோனைத் தேடி தொடரும் தேடுதல்
தலைமறைவாயுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திறந்த பிடியாணை
இதேவேளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (12) விசாரணைக்கு வரவுள்ளது.
தனது சட்டத்தரணிகள் ஊடாக தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரின் அழுத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (12) விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனு குறித்த நீதிமன்ற அறிவிப்பு
இந்நிலையில் மாத்தறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்த இடைக்கால தடை உத்தரவு கோரி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்த கோரிக்கை மீதான உத்தரவு 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவின் தகுதியை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.