'பஸ் லலித்' பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
டுபாயில் இருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் பொலிஸார் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.
அங்கு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த விசேட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரப் பொலிஸாரால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தவிர, சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்களால் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 3,878 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய, 2024ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்திற்குப் பெறப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் மேலும் 1,549 மில்லியன் ரூபா சொத்துக்களையும், 2026ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் 839 மில்லியன் ரூபா சொத்துக்களையும் அரசாங்கத்திற்குப் பெறுவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த அனைத்துச் சொத்துக்களும் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளின் பின்னர் முழுமையாக அரசாங்கத்திற்குப் பெறப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.