20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிசாருக்கு விளக்கமறியல்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக 20,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை குறித்த இரு அதிகாரிகளும் கோரிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது
சந்தேகநபரிடம் இருந்த முழுமையான அளவிலான ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட இடமளிப்பதற்குமாகவே இந்தப் பணம் கோரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். 2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள்ளும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனையிலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.