அம்பாறையில் பொலிஸ் அதிகாரியால் கொல்லபட்ட குடும்பம்... வெளியான அதிர்ச்சி பின்னணி
அம்பாறையில் பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (04-08-2024) காலை T56 ரக துப்பாக்கியை பொலிஸ் நிலையத்திலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை, இகினியாகல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு எடுத்துச் சென்று அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் வேறொரு வீட்டிற்கு சென்று ஒரு தாய் மற்றும் மகள் சுட்டுக் கொலை செய்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னைத்தானே சுட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 54 வயதான தாய், 17 வயதான மகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தாயும், மகளும் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டின் அயலவர்கள் எனவும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் நீண்ட காலமாக காணி தகராறு இருந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இவ்வாறான நிலையில், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி வசிக்கும் வீட்டிற்கு 13 கிலோமீற்றர் தூரத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி வசிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரியை கொன்றுவிட்டு 13 கிலோமீற்றர் தூரம் வந்து தாயையும் மகளையும் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பியவர், மனைவிக்கு அழைப்பேற்படுத்தி தன்னைத் தேடவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
தனது வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை எடுத்து 3 பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பினால் பதற்றமடைந்த மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து பதற்றமடைந்த பொலிஸ் அதிகாரி, மனைவியை அருகில் வர வேண்டாம் என சத்தமிட்டு கூறிய நிலையில் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அவர் அதிகாலை 2.05 மணியளவில் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
32 கிலோமீற்றர் தூரம் சென்ற பிறகு அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையின் பின்னர், அதிகாலை 3.15 மணியளவில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த இந்த அதிகாரி அதிகாலை 4.10 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை பி புதிய நகரைச் சேர்ந்த லஹிரு உதார என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. காணி தகராறில் தாய் மற்றும் மகளின் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளே முறைப்பாடு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.