போலி செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்
பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு காணப்படுகின்றது.
பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் .
எனவே, இந்த அனர்த்த காலத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் .
24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு
அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் கற்பழிப்பு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது .
அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்
மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும்.