ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக பொதுஜன பெரமுன உறுப்பினர் போர்க்கொடி!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்ததாவது,
பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கு வழங்கப்படும் என்று எவரும் கூறவில்லை. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க கூடிய பல தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சியில் உள்ளனர். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்போம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை.
பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே எமது நோக்கமாகும்.
பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி ரணிலை களமிறக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இருப்பினும், மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ரஞ்சித் பண்டார மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.