வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியை கடித்துகுதறிய பிட்புல் நாய்; சம்பவத்தால் ஷாக்!
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினர் மீது ‘பிட்புல்’ ரக நாய் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, கணவன், மனைவி இருவரும் தாங்கள் வாங்குவதற்காகத் தெரிவு செய்திருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.

திடீரென வெளியே பாய்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கிய நாய்
இதன்போது, வீட்டின் வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தியதைத் தொடர்ந்து, வீட்டுக்குள் இருந்த பிட்புல் நாய் திடீரென வெளியே பாய்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், அவர்களை நாயிடமிருந்து மீட்கப் போராடியுள்ளனர். எனினும், அதற்குள் நாய் இருவரையும் உடலின் பல பகுதிகளிலும் கடித்துக் குதறியுள்ளது.
காயமடைந்த இருவரும் மீட்புப் படையினரால் உடனடியாக பாட்டியாலாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பிட்புல் என பொதுவாக அழைக்கப்படும் நாய் வகைகள் வலுவான உடல் அமைப்பு மற்றும் அதிக தாடை வலிமையைக் கொண்டவையாகும்.
அமெரிக்கன் பிட்புல் டெரியர், அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷயர் டெரியர் உள்ளிட்ட ரகங்கள் இந்த வகைப்பாட்டுடன் தொடர்புடையவை. எனினும், நாய்களின் நடத்தை அவற்றின் இனத்தை மட்டுமே சார்ந்தது அல்ல எனவும், முறையான சமூகப் பழக்கம், பயிற்சி, பராமரிப்பு மற்றும் உரிமையாளர்களின் பொறுப்புணர்வு ஆகியவை முக்கியமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.