தமிழரசுக் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
மட்டக்களப்பு - வெல்லாவெளி திக்கோடை பகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்றிரவு (31) இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறக்கம்
குறித்த நபர் திங்கட்கிழமை (31) இரவு மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறியுள்ளார். அந்தநேரத்தில் வீட்டில் மனைவி, பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் பிரேமாகரன் தெரிவித்தார்.
தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.