யாழ் மாணவி கிருசாந்தி குமாராசுவாமி கொலையாளிகள் மனு நிராகரிப்பு
யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தால் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாராசுவாமி பாலியல்வன்முறை படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மரணதண்டனை கைதிகளாக உள்ள ஐவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதிமறுத்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனு
முதல் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவர் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளனர் என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
தங்களின் மரணதண்டனையை நிறைவேற்றால்,தங்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டிசில்வா அவர்களின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடுரமானது மனிதாபிமானற்றது என தங்கள் மனுவில் தெரிவித்திருந்த அவர்கள் இது தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என குறிப்பிட்டிருந்தனர்.
1996 செப்டம்பர் 7 அன்று மாணவி கிருசாந்தி குமாராசுவாமி , இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்