அம்பாறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்!
அம்பாறையில் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமம் 02 ஆம் பிரிவில் நெல்லுச்சேனை உடங்காறு அணைக்கட்டு நீர்த்தேக்கப் பிரதேசத்தில் நேற்று (05-01-2023) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கமைய குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் சம்மாந்துறை செந்நெல் கிராமம் 02 ஆம் பிரிவு நெல்லுச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான அப்துல் றஹீம் முஹமட் சஸ்னி என தெரியவந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் பெற்றோரால் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.