யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் உள்ள இளவாலை பகுதியில் சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (27-06-2024) விளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் விளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் இன்று சுண்ணாம்பு சூளைக்கு வேலைக்காக சென்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.