குருநாகலில் இடம்பெற்ற இந்திய மீனவர்கள் படகு மோதி உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதிக்கிரியை!
யாழ். காங்கேசன்துறை கடற்பகுதியில் கடந்த 25-06-2024 ஆம் திகதி இந்திய இழுவைமடி படகு மோதியதில் உயிரிழந்த இலங்கை கடற்படை வீரரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (27-06-2024) குருநாகலில் நடைபெற்றது.
காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் படகு ஆபத்தை தோற்றுவிக்கும் வகையில் மோதியதில் இலங்கை கடற்படை வீரரும், கடற்படையின் விசேட படகுகள் அணியின் உறுப்பினராக கடமையாற்றி வந்த 41 வயதான பிரியந்த ரத்நாயக்கே என்பவரே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் - இப்பாகமுவ பகுதியை சேர்ந்த இவர் 2004 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துள்ளதுடன், சுழியோடிகள் பிரிவில் திறமையை வௌிப்படுத்திய வீரராவார்.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களை சேர்ந்த சிலரும், கடற்படை வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குருநாகலுக்கு சென்றிருந்ததோடு, கடற்படை வீரருக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்த கடற்படை வீரருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ்ப்பாணம் - மாதகல் வலி. தென்மேற்கு கூட்டுறவு சங்கத்தின் கடற்றொழில் அலுவலகத்தில் குறித்த அஞ்சலி பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.