வவுனியா வீதியில் வழிமறித்து நகைகளை திருடிய நபர் சிக்கினர்!
வவுனியா மாவட்டத்தில் உள்ள வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்றைய தினம் (07-08-2023) தெரிவித்தனர்.
வவுனியாவில் கடந்த ஆறு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வீதிகளில் செல்வோரிடம் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வவுனியாவில் உள்ள நெளுக்குளம், பம்பைமடு, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளில் செல்வோரை வழிமறித்து சங்கிலி அறுக்கப்பட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும், தம்பனை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி அறுக்கப்டபட்டதாக பறயனாலங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் பறையனாலங்குளம், தம்பனை பகுதியில் சங்கிலி அறுத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் பீ.அம்பாவில அவர்களின் வழிகாட்டுதலில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திருல்பெல தலைமையிலான பொலிஸாரும், பறையனாலங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கசூன இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த சம்பவங்களை ஒரு குழு திட்டமிட்டு மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழுவைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த குற்றச் செயல்களை செய்ய பயன்படுத்திய கார் ஒன்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
தம்பனை பகுதியைச் சேர்ந்த 2 பேர், பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த 2 பேர், குட்செட் வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காரில் வைத்தியசாலை சேவையில் பணியாற்றுவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.