கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது
புத்தளம் வென்னப்புவை பிரதேசத்தில் கொரிய பிரஜை ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (17) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் வென்னப்புவை - வெவ வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர்என பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய கொரிய பிரஜை ஒருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்காலிகமாக தங்கியுள்ள கொரிய பிரஜை
வென்னப்புவை பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கொரிய பிரஜை வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதி தேவாலயத்துக்குள் நுழைந்து அங்கிருந்த கொரிய பெண் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் கொரிய பிரஜைக்கும் சந்தேக நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர், தன்னுடன் தகராறு செய்த கொரிய பிரஜையை வென்னப்புவை நகரத்தில் வைத்து கடந்த 17 ஆம் திகதி தாக்கியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.