எரிபொருள் QR குறியீடு இல்லாத அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இரத்து
QR குறியீடு முறைமைக்கு அப்பாற்பட்ட வகையில் எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் (Licenses) உடனடியாக இரத்து செய்யப்படும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் கையிருப்புக்கும், QR முறைமையின் கீழ் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய இன்று (16) முதல் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று முதல் விசேட விசாரணைகள்
இனிவரும் காலங்களில் QR குறியீடு இன்றி எந்தவொரு வாகனத்திற்கும் எரிபொருள் விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. பயணிகளுக்கான பஸ் போக்குவரத்துச் சேவைகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) ஊடாக எரிபொருள் வழங்கப்படும்.
அத்துடன், விவசாய உபகரணங்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்கும் முறைமை குறித்து ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இணையத்தளங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் காணப்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் அனைத்தும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இறுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.