மரவள்ளியை கூட அவித்து உண்ண முடியாத நிலையில் மக்கள்; ரஞ்சித் விதானகே
லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறதாகவும் இதனால் கொழும்பில் உள்ளவர்கள் மரவள்ளி கிழங்கை கூட அவித்து சாப்பிட முடியாத நிலை தோற்றம் பெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும் ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று கிடையாது லாப் ரக சமையல் சிலின்டரை பெற்றுக் கொள்வதில் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளனர்.
மறுபுறம் ஒருசில பிரதேசங்களில் லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுகிறது. லிட்ரோ சிலிண்டர் எதிர்வரும் வாரம் முதல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லாப் ரக சமையல் எரிவாயுவின் விலை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. மீண்டும் விலையை அதிகரிக்க லாப் நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
விற்பனை விலையை கட்டம கட்டமாக 4000 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க லாப் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது.
அதன் காரணமாகவே லாப் நிறுவனம் சிலிண்டர் விநியோகத்தை தற்போது மட்டுப்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது 8 பிரதான அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அரிசி இல்லாவிடின் மரவள்ளி கிழங்கை அவித்து உண்ணுங்கள் என இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை அவர்கள் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு அரசாங்கம் மாத்திரமல்ல ,எதிர்க்கட்சியினரும் பொறுப்புக் கூற வேண்டும்.ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று கிடையாது.
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் குரல் கொடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் தன்மையில் தற்போதைய எதிர்க்கட்சி கிடையாது.
அனைத்து பிரச்சினைகளையும் நடுத்தர மக்கள் எதிர்க் கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.