யாழ்.நெடுந்தீவில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்துடன் பொலிஸ் நிலையம் சென்ற மக்கள்!
யாழ். நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (20-06-2024) அதிகாலை நெடுந்தீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின் நேற்றிரவு இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றையதினம் (21-06-2024) இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதன் பின்னர் நல்லடக்கத்திற்காக சேமக்காலைககு எடுத்துச் செல்லும் போது, மக்கள் சடலத்தை தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற இளைஞன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில்,
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய மூவரையும் விரைவாக கைது செய்யுமாறு கோரி நெடுந்தீவு மக்கள் சடலத்துடன் சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாரின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டிய மக்கள், பொலிஸாரிடம் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் கலைந்து சென்ற மக்கள் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்துள்ளனர்.