இலங்கையில் மனதை நொருங்க வைத்த சம்பவம்; அவசரப்பட்ட மக்களால் பறிபோன உயிர்
கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞன் உயிர்மாய்ப்பு
ரொச்சில்ட் தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமாகாத ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுமுறை கிடைத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க வீட்டிற்கு வருவதை குறித்த இளைஞன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 6 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வந்த அவர் பேருந்தில் தூங்கிய நிலையில் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து வெகுதூரம் சென்றிருந்தார்.
நுவரெலியா செல்லும் வழியில் ரம்பொடையில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அதிகாலை 2 மணி என்பதால் வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாமையினால் அந்தப் பகுதியிலுள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
இரவில் வழியை மறந்துவிட்டு, வேறு வீட்டின் கதவைத் தட்டினார். எனினும் திருடன் என நினைத்த குடியிருப்பாளர்கள் கூச்சலிட்டபோது, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வந்து அந்த இளைஞனை தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்த தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களும் குறித்த இளைஞனை தெரியாது என தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் இளைஞன் மீது தீவிர தாக்குதல் மேற்கொண்ட நிலையில், கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொத்மலை பொலிஸாரிடம் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தினர். அவரது நண்பர்கள் அவரை முச்சக்கர வண்டியில் கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் மிகவும் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனவேதனை அடைந்த முரளி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.