கனடாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும்; குதிக்கும் சரத்வீரசேகர
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் தலைவருமான சரத்வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என தெரிவித்துள்ள சரத்வீரசேகர கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நேற்று தேசியபார்வை தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கருத்து தெரிவித்த சரத்வீரசேகர ,
ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகள்
அமைச்சரவையின் அனுமதியை பெற்ற பின்னர் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனடாவின் தீர்மானத்தினை கண்டிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை கொண்டுவரவேண்டும்.
இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கனடாவின் நடவடிக்கைக்கு வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம் வெளியிட்டதை பாராட்டியுள்ள சரத்வீரசேகர, கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையிலேயே கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக பயணத்தடைகளை விதித்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
அதோடு இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு குறித்த கோரிக்கைகள் நியாயப்படுத்தப்படு;ம் நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்தால் இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை இழப்பார்கள் எதிர்கால யுத்தங்களில் அவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை என்பது கற்பிதம்
விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பி இராணுவத்தினரிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் இனப்படுகொலை என்பது கற்பிதம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளிவிவகார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதலிற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் காரணமாக பாதுகாப்புசட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது எனவும், வடக்கி;ன் பாதுகாப்பை பணயம் வைத்து இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்ககூடாது எனவும் சரத் வீரசேகர கருத்துவெளியிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.