பெண்ணை அழைத்து சென்ற பெற்றோர்; கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு
வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்த பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வருகைதந்து பெண்ணை அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும் பொலிசார் அந்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
அத்துடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர்.
எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டுள்ளனர். மேலும் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!