சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தஹம் பாடசாலை ஆசிரியர்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கடந்த 2015ஆம் ஆண்டு மைனர் சிறுவன் ஒருவன் மீது பாரதூரமான பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றவாளிக்கு, மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் கலாநிதி தமித் நலிந்த ஹேவாவசம் வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அத்திமலே, 70 சந்ததி, பில்டிங் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய தஹம் பாடசாலை ஆசிரியருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடூழியச் சிறைத்தண்டனை
2015ஆம் ஆண்டு, குறித்த சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனைத் தனது துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, குளக்கட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில், இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 12 ஆண்டுகள் வீதம் மொத்தம் 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இத்தண்டனையை 12 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஓராண்டு மென்காவல் தண்டனையும், இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் மூன்று ஆண்டுகள் மென்காவல் தண்டனையும் விதிக்கப்படும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.