கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் , சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றை வலி.தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

விசேட கூட்டம்
இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.
அதன் போது, குப்பைகளை மீள அள்ள வேண்டும் என வலி. தெற்கு பிரதேச சபைக்கு கால எல்லை அறிவிக்கப்பட்டு , அவர்கள் அதனை மீள அள்ளவில்லை.
அதற்கு எதிராக தவிசாளர் இதுவரையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை.
கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பிலும் , அதன் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க என கடந்த 14ஆம் திகதி விசேட கூட்டம் கூட்டப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் , அக்கூட்டம் கூட்டப்படவில்லை.
இந்த விசேட கூட்டம் கூட்டப்படுவது தொடர்பில் சென்ற கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவும் இல்லை இவை அனைத்தும் தவிசாளரின் உதவியுடன் நடைபெறுவதாக தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் உரிய நடவடிக்கை தவிசாளர் எடுக்க வேண்டும் என கோரி பெரும்பாலான உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர்.
அதனால் இன்றைய சபை அமர்வு நடைபெறாத நிலையில் , அது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , வலி. தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டனர்
அதனை அடுத்து , கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளைய தினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்க உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்