நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி ; இராமலிங்கம் சந்திரசேகர் காட்டம்
நாடாளுமன்றில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியில் பேசுவதை பார்த்து கேளியாக சிரிக்கின்றனர்.
தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர். நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன்.
ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும். தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்.