காணாமல் போயிருந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மீட்பு
கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
08 ஆம் வகுப்பு மற்றும் 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் புதன்கிழமை (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் புதன்கிழமை (08) அன்று மகாவலி கங்கைக்கு செல்வதை கண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போன சிறுவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மற்றைய சிறுவனை தேடும் பணிகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.