யானைக் காவல் பரணில் இருந்து கீழே விழுந்து ஒருவர் மரணம்
மட்டக்களப்பு வாகரை – கதிரவெளி சாளம்பைக்குளம் என்ற வயல் பிரதேசத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் வாகரைப் பிரதேச செயலகத்தில் சமூர்த்தி முகாமையாளராகக் கடமை புரியும் 47 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர், வழமையாக வயல் காவலுக்குச் செல்பவர் என்றும் கடந்த புதனன்றும் வயல் காவலுக்குச் சென்றதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
மரண விசாரணை
வழமையாக இரவுக் காவல் முடிந்து காலையில் வீடு வந்து சேர்பவர் அன்றைய தினம் வந்து சேராததால் அவரது மகன் தகப்பனை வயலுக்குத் தேடிச் சென்றுள்ளார்.
அப்போது தந்தை பயணம் செய்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்தப்பட்டிருக்க, பரணடியில் தந்தை இறந்து கிடந்துள்ளார்.
சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதும் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் பேரில் மரண விசாரணை அதிகாரி ரமேஸ் ஆனந்தன் பிரேத பரிசோதனை நடத்தினார்.
அதனடிப்படையில் பரணில் இருந்து நிலத்தில் விழுந்ததில் தலையில் பலமான அடிபட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
சடலம் உறவினர்களின் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.