தற்போது உலகை அச்சுறுத்தும் Omicron; நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
கொரோனாவின் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் விடுபடாத நிலையில், தற்போது ஒமிக்ரான் எனும் வைரஸால் உலகம் அச்சத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் (Omicron) என விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் புதிய வேரியன்ட் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மருத்துவ பெயர் B.1.1.529 என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு ஒமிக்ரான் என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. ஒமிக்ரான் என்பது கிரேக்க எழுத்துக்களில் ஒன்றாகும். ஆல்ஃபா, பீட்டா, காமா என தொடங்கும் கிரேக்க எழுத்துக்களில், 15- வது எழுத்தாக ஒமைக்ரான் (Oo) வருகிறது. தமிழில் இதனை ஒமிக்ரான் என சிலர் அழைத்தாலும், ஒமைக்ரான் என்பதுதான் சரியானதாக இருக்கும்.
இதேவேளை முன்னதாக இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு மருத்துவ பெயராக B.1.617.2 என்பது மருத்துவப் பெயர். இப்படி அழைப்பதில் சிரமங்கள் இருக்கும் என்பதால், அதனை டெல்டா என்று அறிவியலாளர்கள் அழைத்தனர். டெல்டா என்பது கிரேக்க எழுத்துக்களில் வரும் 4-வது எழுத்தாகும்.
இந்த நிலையில் முந்தைய வகைகளை விட அதிக ஸ்பைக் புரோடீன்களை ஒமைக்ரான் வைரஸ் கொண்டுள்ளதால், எளிதாக மனித செல்களுக்குள் புகுந்து விட முடியும். இவை மற்ற வேரியன்ட்களை விட அதிக வீரியம் கொண்டவை என்றும் அறிவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம்தான் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும், அதிகமுறை உருமாற்றம் அடைவதால் இவை நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டாக்டர். மரியா வான் கெர்கோ (Maria Van Kerkhove) கூறியுள்ளார்.
ஒமைக்ரான் (Omicron)வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறானதாக இருக்காது என்று தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ள அதேவேளை சிலபேரிடம் அறிகுறிகளே இல்லாமல் ஒமைக்ரான் (Omicron) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் செயலிழக்க வைக்கும் சக்தி, ஒமைக்ரான் (Omicron) வைரசுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால்தான் உலக நாடுகள், பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அதேவேளை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றின் மூலம், ஒமைக்ரான் பரவலை குறைக்க முடியும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அங்கிருந்து வரும் விமானங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அலட்சியம் செய்யவதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டும் அதேவேளை,
தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை ஒமைக்ரான் (Omicron) உணர்த்தியுள்ளது.