அருவருப்பான மெசேஜ்; மூன்றாண்டுகளாக தவித்த லவ் டுடே நடிகை!
லவ் டுடே நடிகை ரவீணா ரவி , சமூக ஊடகங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக தங்களைத் துன்புறுத்துபவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
`ஒரு கிடாயின் கருணை மனு' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், `காவல்துறை உங்கள் நண்பன்', `ராக்கி', `லவ் டுடே', `மாமன்னன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட்களும், மெசேஜும் செய்யும் நபர் பற்றி பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆபாச கமெண்ட்களும், மெசேஜும் செய்யும் நபர்
மூன்று வருடங்களாக எங்களைத் துன்புறுத்தி வரும் ஒரு நபரிடமிருந்து என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும், என்னையும் பாதுகாக்கவே இதைப் பதிவிடுகிறேன்.
காவல்துறை புகார்கள் மற்றும் எச்சரிக்கைகள் இதை நிறுத்தும் என்று நம்பி, நான் அமைதியாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, சபரிஷ் என்ற நபரும் அவரது இரட்டைச் சகோதரரும் என்னையும், என் குடும்பத்தினரையும், என் நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவர்கள் குறுஞ்செய்திகள், கமெண்ட்களில் அருவருப்பான மொழியைப் பயன்படுத்துகின்றனர். என்னை மட்டுமல்ல, எனக்கு நெருக்கமானவர்களையும் குறிவைக்கின்றனர்.
என்னால் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்த என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நாங்கள் சட்டப்பூர்வ வழியை முயற்சித்தோம், ஆனால் துன்புறுத்தல் நிற்கவில்லை.
அந்த நபர் பல கணக்குகளில் இருந்து செயல்பட்டு, என்னை மட்டுமல்ல, பல்வேறு பெண் நடிகர்கள் மற்றும் தொழில்முறை கலைஞர்களையும் பின்தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்.
அவர்கள் பதிவில் `ஏற்கெனவே சந்தித்தது போலவும்', `திருமணம் நிச்சயிக்கப்பட்டது’ போன்ற கற்பனை கதைகளையும் உருவாக்குகிறார்கள். இதைப் பகிரங்கமாகப் பேச வேண்டிய நேரம் இது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. இந்த நகரம் அனைவருக்கும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க இதுபோன்ற அயோக்கியர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் ரவீணா ரவி