லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் உட்பட நான்கு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில், நான்கு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுபப்பட்டுள்ளது.
அதன்படி லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று கட்டளையிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ருவான் பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் சம்பத் விஜேரத்ன ஆகியோரடங்கிய அமர்வு இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்தது.
இந்த மனுவை, பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி, நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட தரநிலைகள் இல்லாமல் வீட்டு உபயோகத்துக்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீட்டித்தது.
அத்துடன், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட எரிவாயு கலவையை காட்சிப்படுத்தாமல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.