வவுனியா பாடசாலைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம்; பெருமைப்படுத்திய மாணவி
வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் நடைபெற்றது.
வரலாற்றில் பாடசாலைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம்
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.
அதேவேளை வட மாகாண மெய்வல்லுநர் போட்டி வரலாற்றில் இப் பாடசாலைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். அத்துடன் தட்டெறிதல் போட்டியிலும் சரனியா சந்திரசேகரன் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் சிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளருக்கான விருதையும் கள நிகழ்ச்சிகளில் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றெடுத்து பாடசாலைக்கும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை பயிற்றுநர் ஜெ. தட்சாவையும் மாணவியை ஊக்குவித்து சகலவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்கிய ஆசிரியர் எஸ். சக்தி, பாடசாலை அதிபர் பீ. கேமலதன் ஆகியோரையும் பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது.