மோட்டார் போக்குவரத்து திணைக்கள இளம் அதிகாரிகள் இருவரின் மோசமான செயல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளைப் பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் நபர்களை ஏமாற்றி, பணம் பெற்றுக்கொண்டு போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை இவர்கள் வழங்கி வந்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாடிக்கையாளர் போல வேடமிட்டு, 10,000 ரூபாவிற்கு அனுமதிப்பத்திரம் பெறச் சென்ற போதே பிரதான சந்தேகநபர் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கு ஒட்டப்படும் 9 உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.