வடமாகாண ஆளுநரின் பணிப்புரை: மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்ட நாவலர் உருவப்படம்
நாவலர் மண்டபத்தில் கழற்றப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவப்படம் மீண்டும் இன்றைய தினம் (30-03-2023) வியாழக்கிழமை பொருத்தப்பட்டது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் (Jeevan Thiyagaraja) பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த நாவலர் பெருமானின் திருவுருவப்படம் சில வாரங்களுக்கு முன்னர் கழற்றப்பட்டு ஒரு மூலையில் போடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் நாவலர் பெருமானின் உறவு முறை வழிவந்தோரால் ஆளுநர் செயலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது கொழும்பு ஆறுமுக நாவலர் சபை மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன யாழ். ஆணையாளரின் செயற்பாடு தொடர்பில் தமது கண்டனங்களையும் வெளியிட்டன.
இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய மீண்டும் நாவலர் திருவுருவப்படம் உரிய இடத்தில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.