ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ, யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தின் இலங்கைக்கான குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன,
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது, ஜப்பானிய மக்களுக்கு வடக்கு மக்கள் சார்பாக இந்த இடத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜப்பானிய அரசாங்கத்தால் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகள் எமக்கு கடந்த காலத்திலும் கிடைக்கப்பெற்றிருந்தன. எதிர்காலத்திலும் அந்த உதவிகள் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.
குறிப்பாக தெல்லிப்பழையில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.
அதேபோல வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
அதற்குரிய உள்கட்டுமானங்களுக்கான உதவிகள் தொடர்பிலும் ஆராயுமாறும் இந்தச் சந்தர்ப்பதில் வேண்டுகோள் முன்வைக்கின்றேன். அதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் உரையாடும்போது எமக்கு ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
விரைவில் அதனை மேற்கொள்வதாக அவரும் கூறியிருக்கின்றார். அதைச் செயற்படுத்துவதன் ஊடாக எமது மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் 9 சிகிச்சை நிலையங்கள் இவ்வாறு புனரமைப்புக்காக உள்வாங்கப்பட்டு அவற்றில் 8 நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவற்றுக்கான சான்றிதழ்களும் இந்த நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டன.