சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது ; லிட்ரோ நிறுவனம் மகிழ்ச்சித் தகவல்
நாட்டில் இனி எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் லிட்ரோ சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை
நேற்று கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை விரைவில் கொள்கலன்களுக்கு நிரப்பி அதனைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் மெட்ரிக்தொன் எரிவாயுவை மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை கொண்டுவர லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒன்பதாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.