இந்தியாவில் புதிய வகை வைரஸ் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர்( The Indian Council of Medical Research (ICMR)) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக டெல்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், டெல்லியில் 11 ஆயிரம் வீடுகளில் எடுக்கப்ப ட்ட ஆய்வுகளில் 69 சதவீத வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு இவ்வகை காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
H3N2 வைரஸ் காய்ச்சல்
இது கொரோனாபோல அதிதீவிரமாக இருக்காது என்றபோதிலும், எச்சரிக்கையுடன் இருக்க ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
”இது ஒரு சுவாச வைரஸ் தொற்று ஆகும். இது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது.
தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்
மேலும், H3N2 வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது, மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இது குறிப்பாக இருமல், தும்மல் அல்லது பேசும்போது வெளியாகும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.
எனினும், இந்த வைரஸ் புதியதல்ல. பழைய வைரஸ்தான். இந்த வைரஸின் ஒரு சிறப்பு வகையே இப்போது பரவி வருகிறது.
அறிகுறிகள்
வானிலை மாறும்போது இந்த வகை பரவுகிறது. பொதுவாக, அறிகுறிகள் அதிக காய்ச்சல், சளி, தொண்டை வலி, தலைவலி, தசை, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி மற்றும் சில நேரங்களில் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையாகும்.
ஆனால் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதிக காய்ச்சல் இருக்கும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த வைரஸ் தானாகவே குணமடைகிறது. மக்கள் பொதுவாக 3-5 நாட்களில் குணமடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.