வவுனியாவில் பழைய பொருளுக்கு புதிய விலை!
வவுனியா மாவட்டத்தில் பழைய பொருட்களுக்கு புதிய விலையை மாற்றம் செய்து விற்பனை செய்தமை தொடர்பில் அதிக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அ.லெ.ஜெஃபர்ஷாதிக் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ் வருடத்தில் பல சுற்றிவளைப்புகளையும், சோதனை நடவடிக்கைகளையும் வவுனியா மாவட்டத்தில் மேற்கொண்டிருந்தோம். ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 322 வழக்குகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 292 வழக்குகள் பதியப்பட்டு 16,33,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1,51,500 ரூபாய் அபராதம்
அத்துடன் கடந்த மாதம் 48 வழக்குகள் பிடிக்கப்பட்டு, 37 வழக்குகள் பதியப்பட்டதுடன், 1,51,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த வழக்குகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப் பத்திரத்தை காட்சிப்படுத்தாது பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.