சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு புதிய செயற்திட்டம்
கொழும்பு வெலிகடை உட்பட சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் பாரிய இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்திக்கும் வகையில் சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (12) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கட்டமைப்பு
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுவாக நோக்கும்போது சிறைச்சாலைகளில் 10 ஆயிரத்து 700 கைதிகளுக்கே இடம் உள்ளது. எனினும் சிறைச்சாலை கட்டமைப்புக்குள் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் காணப்படுகின்றனர். அவர்களின் 19,000 பேர் விளக்கமறியல் கைதிகளாக உள்ளனர்.
கொழும்பு, பொலனறுவை உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளிலும் இட நெருக்கடி காணப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களிலும் அந்த நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் இம்முறை அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும். சிறைச்சாலைகளில் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட கைதிகள் பகுதியில் இட நெருக்கடி காணப்படவில்லை. அந்த வகையில் மேற்படி குழுவில் பரிந்துரைக்கமைய இட நெருக்கடியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.