மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக விக்கும் அதுல களுஆராச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அதுல களுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி, கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.
அத்துடன் அவர் தனது 33 வருட சேவையின் போது 27 ஆண்டுகள் நீதிவான் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி, குற்றவியல் உயர் நீதிமன்றம் மற்றும் சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
மேலும் அதுல களுஆராச்சி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.