புதிய பச்சை நிற இலக்கத் தகடு ; அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு இன்மையால், புதிய மின்சார சிற்றூந்து உரிமையாளர் ஒருவர் வீதியில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெலிவேரிய பகுதியில் தனது புதிய மின்சார சிற்றூந்தில் பயணித்த வேளையில், அதன் பச்சை நிற இலக்கத் தகட்டைக் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை மறித்து விசாரணை நடத்தியதாக குறித்த வாகன உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

புதிய வகை இலக்கத் தகடு குறித்து காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்காததால், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாகனப் பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மற்றும் தொடர்புடைய ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அது சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட இலக்கத் தகடு என்பதைத் தான் நிரூபிக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரை மட்டும் முழுமையாகக் குற்றம் சுமத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மின்சார வாகனங்களுக்கான இந்த புதிய மாற்றம் குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, வாகனப் பதிவு நடைமுறைகள் மற்றும் இலக்கத் தகடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்துவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்க தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை காவல்துறை நிலையங்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாகனப் பதிவு மற்றும் அடையாள அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், அது குறித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு இடையே போதிய தொடர்பாடலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.