யாழ்ப்பாணம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு ; 5 மாதங்கள் கழித்து மீண்டும் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரான சந்தேகநபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.