தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்
தேசிய கல்வி நிறுவனத்தின் 15வது பணிப்பாளர் நாயகமாக, முன்னணி கல்விமானும் பொருளியல் நிபுணருமான சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா அவர்கள் திங்கட்கிழமை (2026 ஏப்ரல் 20) மகரகமையில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
சிரேஷ்ட பேராசிரியர் தயாரத்ன பண்டா அவர்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நீண்டகால அனுபவம் கொண்ட ஒரு நிபுணராவார்.

கல்வி பின்னணி
இப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக, அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றியதுடன், அதே பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகவும் (2015-2021) கடமையாற்றியுள்ளார்.

அத்தோடு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் ஆரம்ப பீடாதிபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் (PhD) பெற்ற அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிதிப் பொருளியல் துறையில் முதலாம் வகுப்பு கௌரவப் பட்டம் பெற்றவராவார்.
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கௌரவ ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள அவர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களின் ஆசிரியரும் ஆவார்.
பிரயோகப் பேரினப் பொருளியல், சர்வதேச வர்த்தகம், வங்கி மற்றும் நிதி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் விசேட நிபுணத்துவம் கொண்ட பேராசிரியரின் கல்விசார் தலைமைத்துவம், இலங்கையின் கல்விக் கொள்கை உருவாக்கம் மற்றும் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது