காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர் ; அக்காவாக மாறிய மனைவி ; யாழில் சிக்கிய சந்தேகநபர்களிடம் வெளியான தகவல்
தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கான நேற்றிரவு (24) நுவரெலியா பொலிஸ்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
கடந்த ஜூன் 17 ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி
அவரது காதலன், சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், அவர் சடலத்தை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி காணொளிகளிலும் பதிவாகியிருந்தது.
7 நாட்களாக சந்தேகநபரைத் தேடுவதற்காக, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் பயணித்த பேருந்தை சாவகச்சேரி, கைதடி பகுதியில் மறித்து, சந்தேகநபரையும் அவரது மனைவியையும் குழந்தையுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்படும்போது சந்தேகநபர் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணைப் போல போலியாக வேடமிட்டிருந்தார். சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் போலி தலைமுடியும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அவர்கள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாம் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனியவுக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் இது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், அவரிடமிருந்து தாம் பணம் பெற்றிருந்தாலும், அது ஒன்றரை கோடி ரூபாய் அல்லவெனவும் அவர் கூறுகிறார்.
தம்மால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் "மூத்த சகோதரி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார். தமக்குள்ள மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.
சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மரணத்தை ஏற்படுத்திய 16 ஆம் திகதி மாலை, பிரதான சந்தேகநபர் சடலம் இருந்த அதே காரில் குண்டசாலையில் உள்ள இந்த ஊழியரின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், சந்தேகநபரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் அதே காரில் அழைத்து வந்து, பிரதேச சபை ஊழியரின் வீட்டில் இரவு தங்கியிருந்துள்ளனர்.
மறுநாள் சடலத்தைத் தெல்தெனியவுக்குக் கொண்டு செல்லும்போது, பிரதேச சபை ஊழியர் மோட்டார் சைக்கிளில் காருக்குப் பின்னால் சென்றுள்ளார். சடலத்தை வீசிய பிறகு, சந்தேகநபரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் இந்த நபர்களை மாத்தளையில் உள்ள சந்தேகநபரின் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அவர் உதவியுள்ளார். சந்தேகநபர் இந்த ஊழியரின் மனைவியிடமும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, பிரதான சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் பெரும் மோசடிக்காரர் ஆவார்.
உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றபோதுதான் அவர் சந்தித்துள்ளார். சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.