விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி! யாழில் ஒன்றுகூடிய முக்கியஸ்தர்கள்
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒன்றை தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் அமைக்கும் நோக்கில் இன்றைய தினம் (12-01-2023) இடம்பெற்ற கலந்துரையாடல் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.
இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணியளில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
இருப்பினும், இதன்போது எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.
இந்த நிலையில் நாளையதினம் (13-01-2023) நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணிக்கான ஒப்பந்தமும் நாளை கைச்சாத்திடப்படுமெனறும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்
வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ்
உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.