அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றின் மோசடி
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்ற உட்புற நிதி மோசடியின் பெறுமதி சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகை
இது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகையாகும். கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) வழங்கிய அறிவிப்பில், இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இழந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மோசடியினால் வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி உறுதி அளித்துள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி NDB வங்கிக்குச் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: திட்டமிடப்பட்டிருந்த பண ஈவுத்தொகை (Cash Dividend) வழங்குவதை நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கிளைகளை விரிவாக்குதல் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் (Scrip Dividend) நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட பிரிவின் ஆவணங்கள் மற்றும் தரவு அணுகல் முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அப்பிரிவு புதிய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, வங்கியின் உட்புறக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்காக சுயாதீன தடயவியல் தணிக்கை (Forensic Audit) ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது. வங்கியின் மூலதனம் மற்றும் திரவத்தன்மை பலமாக இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கி தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், வங்கியின் திரவத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது.
மத்திய வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த பணப்பரிமாற்ற பங்குலாபம் (Cash Dividend) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், 'ஸ்கிரிப்' பங்குலாபம் (Scrip Dividend) திட்டமிட்டபடி தொடரும். வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய அபிவிருந்தி வங்கி (National Development Bank PLC) கேட்டுக்கொண்டுள்ளது. மேலதிக விளக்கங்களுக்கு அருகிலுள்ள கிளைகளையோ அல்லது 011 744 8850 என்ற துரித அழைப்பிலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.