தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த பெண் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தியவன்னா ஓயாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்தஉயிர்காக்கும் குழுவினர், கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் பெண்ணொருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து, கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அதிவேக அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், குறித்த பெண்ணை பாதுகாப்பாக நீரில் இருந்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.