குடியுரிமையை விற்கும் குட்டி தீவு ; யார் வேண்டுமானாலும் வாங்கலாம்!
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெறும் எட்டு சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான நவ்ரூவின் குடியுரிமையை இப்போது குறைந்தபட்சம் $105,000 ( இந்திய ரூ.91.38 லட்சம்) கொடுத்து யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக் கொள்ளலாமாம்.
நவ்ரூ தீவின் கடல்மட்ட உயர்வு, புயல் அலைகள் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, காலநிலை நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு "தங்க பாஸ்போர்ட்" என்ற முயற்சியை நவ்ரூ அரசாங்கம் தொடங்கியுள்ளது.
உலகின் மிகவும் மோசமாக காலநிலை
உலகின் மிகவும் மோசமாக காலநிலை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றான நவ்ரு நாடு உள்ளது. நவ்ரூ தீவில் உள்ள 12,500 பேர் கொண்ட மக்கள்தொகையில் 90 சதவீதத்தை உயர்ந்த நிலங்களுக்கு மாற்றுவதற்கும், புதிய சமூகத்தை உருவாக்குவதற்கும் தேவைப்படும் நிதிக்காக தங்கள் நாட்டின் குடியுரிமையை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நவ்ரூ தீவின் கடற்கரையில் வசிக்கும் பலர் நிலத்தை ஏற்கனவே இழந்துவிட்டனர். சிலரது வீடுகள் பெரும் அலைகளில் முழுவதும் மூழ்கிப்போனது.
அவர்களிடம் இழக்க இப்போது ஒன்றுமே இல்லை" என நவ்ரூ பிரஜையான , ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் வணிகப் பள்ளியின் ஆராய்ச்சியாளருமான டைரோன் டீயே கூறுகிறார்.
அதேவேளை கடந்த காலங்களில் நவ்ரூ தீவின் தங்க பாஸ்போர்ட் திட்டங்களில் பெரும் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இருப்பினும், காலநிலை நிதியைப் பெற போராடும் வளரும் நாடுகளுக்கு, இத்தகைய முயற்சிகள் ஒரு சாத்தியமான உயிர்நாடியை வழங்குகின்றன.
89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல்
நவ்ரூ தீவின் பாஸ்போர்ட் இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது என இதன் சாதகங்களை பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நவ்ரூ தீவின் குடியுரிமை விற்பனையானது நவ்ரூ போன்ற சிறிய நாடுகளுக்கு "மிகப்பெரிய" பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்திலிருந்து முதல் ஆண்டில் $5.6 மில்லியன் ஈட்ட முடியும் என நவ்ரூ அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மொத்த அரசாங்க வருவாயில் 19% பங்களிப்பதே இதன் இலக்காகும். கடந்த 1990 ஆண்டின் நடுப்பகுதியில், இதுபோன்று செயல்படுத்தப்பட்ட திட்டம் ஊழலால் பாதிக்கப்பட்டது.
முக்கியமாக 2003-ம் ஆண்டு மலேசியாவில் நவ்ரூ பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த காலம் போல் பிரச்சினைகள் ஏதும் நிகழாமல் தடுக்க, அரசாங்கம் கடுமையான சோதனை நடைமுறைகளை உறுதியளித்துள்ளது.
அதேசமயம் இந்த முறை திட்டத்தின் சோதனை கடுமையானதாக இருக்கும் என்றும், ரஷ்யா மற்றும் வட கொரியா உட்பட ஐக்கிய நாடுகள் சபையால் அதிக ஆபத்துக்குரியது என நியமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நவ்ரூ குடியுரிமை பெறுவது சிரமம் என்றும் தெரிவித்துள்ளது.